குறுவை இழப்பீடுக்கு 18,520 இடங்களில் பயிர் அறுவடை சோதனை
குறுவை இழப்பீடுக்கு 18,520 இடங்களில் பயிர் அறுவடை சோதனை
ADDED : அக் 29, 2025 03:45 AM
சென்னை: 'குறுவை நெல் பயிரில் மகசூல் இழப்பை கணக்கிட, 18,520 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன மழையால் அறுவடைக்கு தயாராகி வரும் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 18,520 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இதுவரை, 13,140 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; மீதமுள்ள, 5,380 பரிசோதனைகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.
பயிர் அறுவடை சோதனைகளை முழுதுமாக முடித்து, தகுதி வாய்ந்த கிராமங்களுக்கு, வழக்கமாக 2026 ஜனவரியில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இதை நடப்பாண்டு டிசம்பர் மாதம் வழங்க வேண்டும் என, பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
இதுவரை, 16.6 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. குறைவான விவசாயிகளே பயிர் காப்பீடு செய்துள்ளனர். விரைவாக காப்பீடு செய்வதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

