தமிழகத்தை நெருங்குது புயல் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை
தமிழகத்தை நெருங்குது புயல் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை
ADDED : நவ 28, 2024 01:43 AM

சென்னை:தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வருகிறது.
இதனால், 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும், அதில் நான்கு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினத்தில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே மாவட்டத்தில் கோடியக்கரை, வேளாங்கண்ணி பகுதிகளில் தலா, 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இது புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 3 வரை இந்நிலை தொடரக்கூடும்.
இன்று
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுதினம் மிக கன மழையும், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று கன மழையும், நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மிக கன மழைக்கான வாய்ப்பும் உள்ளது.
புயல் கரையை நெருங்கும்போது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதே போன்று, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வேகத்தில் மாற்றம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், எதிர்பார்த்த திசையில் நகர்கிறது. ஆனால், அதன் வேகம் ஒரே சீராக இல்லை என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் பகல் நேரத்தில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த இந்த அமைப்பு, மாலை மற்றும் இரவு நேரத்தில் மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் நகர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி, மணிக்கு, 13 கி.மீ., வேகத்தில் இதன் நகர்வு அமைந்துள்ளதாக, வானிலை துறை வாயிலாக தெரியவந்துள்ளது. இந்த வேக மாற்றத்துக்கான காரணங்களை, வானிலை துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
புயல் தாக்கம் பெரிதாக இருக்குமா?
தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல், சென்னை - நாகப்பட்டினம் இடையே, புதுச்சேரி, கடலுார் பகுதிகளில், 30ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது.நாளை காலையில், டெல்டா மாவட்டங்களில் மழை இருக்கும். இந்த அமைப்பு ஒரே இடத்தில் நிலை கொண்டு, மெல்லநகரும்என்பதால், இன்று பகலில் மழை இருக்காது.
இன்று இரவு முதல் மழையின் தாக்கம், டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், இன்று இரவு முதல் மழையின் தாக்கம்
அதிகரிக்கும்.
வடக்கு காற்று ஊடுருவல் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. வடக்கு காற்று ஊடுருவல் குறையும்போது மழை அதிகரிக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல வெவ்வேறு அடுக்குகளில், காற்று முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அமைப்பு புயலாக வலுவடைந்தாலும், அதன் தாக்கம்
பெரிதாக இருக்காது, விரைவாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.