தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்த 'டான்பாமா'; முந்தைய நாளும் விடுமுறை தர கோரிக்கை
தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்த 'டான்பாமா'; முந்தைய நாளும் விடுமுறை தர கோரிக்கை
ADDED : அக் 21, 2024 12:44 AM
சிவகாசி : தீபாவளி கொண்டாட்டத்திற்கு கூடுதல் விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தீபாவளிக்கு முந்தைய நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன.
அக். 31ல் தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் இப்பகுதியில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா) கணேசன் கூறியதாவது:
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது போல தீபாவளிக்கு முந்தைய நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், என்றார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் கூறியதாவது:
தொடர் விடுமுறை நாட்கள் கூடுதலாக இருப்பதால் நவ. 2 வரை தற்காலிக பட்டாசு கடைகளில் சில்லறை வணிகம் பட்டாசு விற்பனைக்கு உரிமம் அரசு கொடுத்துள்ளது. இந்த உரிமத்தை நவ. 4 வரை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

