மனைப்பிரிவு பதிவுக்கு வைப்புத்தொகை; ரியல் எஸ்டேட் ஆணைய முடிவால் அதிர்ச்சி
மனைப்பிரிவு பதிவுக்கு வைப்புத்தொகை; ரியல் எஸ்டேட் ஆணைய முடிவால் அதிர்ச்சி
ADDED : செப் 09, 2025 05:53 AM

சென்னை : 'மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் போது, வழக்கமான கட்டணங்களுடன், புதிதாக பரப்பளவு அடிப்படையில், 1 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வைப்புத்தொகை செலுத்த வேண்டும்' என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 5,381 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவிலான வீடு, மனை திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். இவ்வாறு பதிவு செய்யும் போது, சதுர அடி அடிப்படையில் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆணையத்தில் பதிவு செய்த மனைப்பிரிவு திட்டங்கள் தொடர்பான பத்திரங்களை மட்டுமே பதிவுக்கு பதிவுத்துறை ஏற்கும். இதில், கட்டுமான திட்டங்களை பதிவு செய்வோர், அதில் பணிநிறைவு குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
ஆனால், மனைகள் விற்பனை விபரங்கள், அதில் அடிப்படை வசதிகள் மேற்கொண்ட விபரங்கள், ஆணையத்துக்கு வருவதில்லை. இதனால், மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோருக்கு, வழக்கமான கட்டணங்களுடன் வைப்புத்தொகை வசூலிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ரூ.20 லட்சம் வரை இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு:
மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோர், அதில் பொது வசதிகளை முறையாக செய்தது தொடர்பான பணிநிறைவு அறிக்கையை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், அனைத்து மனை களும் விற்பனையானது குறித்தும், ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் போது, புதிதாக வைப்புத்தொகை வசூலிக்கப்படும். இதற்கு வட்டி அளிக்கப்பட மாட்டாது.
அதேநேரம், அடிப்படை வசதி பணிகள், விற்பனை முடிந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது, இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும்.
வசூலிப்பு
இதன்படி, 1 ஏக்கர் பரப்பளவு அல்லது 1 கோடி ரூபாய் மதிப்பிலான மனைப்பிரிவு திட்டங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். 5 ஏக்கர் பரப்பளவு அல்லது 5 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான திட்டங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
ஐந்து ஏக்கருக்கு மேல், 10 ஏக்கர் பரப்பளவு அல்லது 10 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான திட்டங்களுக்கு, 10 லட்சம் ரூபாய், இதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு, 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
இதில், 75 சென்ட் நிலத்தில், ஒரு மனைப்பிரிவு செயல்படுத்தப்படும் போது, அதன் மதிப்பு, 1.5 கோடி ரூபாயாக இருந்தால், அதற்கு, 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை வசூலிக்கப்படும்.
இதேபோன்று, 6 ஏக்கர் பரப்பளவு, 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.