UPDATED : அக் 02, 2025 06:14 PM
ADDED : அக் 02, 2025 05:46 PM
தினமலருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நெருக்கம் பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தது உண்டு. பரஸ்பர மரியாதையும் சுதந்திரமுமே அந்த உறவின் அடித்தளம் என்பது பலருக்கு தெரியாது.
அதிமுக சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடை தேர்தல். இரண்டு மாதங்கள் பெரும் சிரமங்களை தாங்கி கொண்டு தினமலர் நிருபர்கள் செய்தி சேகரித்தார்கள்.
பிரசாரம் ஓய்ந்தபின் தினமலர் நிருபர்களை எம்.ஜி.ஆர். அழைத்து உரையாடினார். உழைப்பை வெகுவாக பாராட்டியவர், முடிவில் ஒரு யோசனை சொன்னார்.
“உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றி சரியான விமர்சனங்கள் வெளிவர வேண்டும். தினமலர் 50 பக்கம் கொண்ட சிறப்பு மலர் வெளியிட வேண்டும். பட அதிபர்கள், திரை தொழில் நுட்ப வல்லுநர்கள் மனம் திறந்து 25 பக்கம் கட்டுரைகள் எழுத வேண்டும். மீதமுள்ள 25 பக்கங்களுக்கு விளம்பரம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
நிருபர்கள் அதை நிறுவனர் டி.வி.ஆர். கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் உடனே சொன்னார்:
“இது ஒரு புதுமையான முயற்சி. 25 பக்கம் விளம்பரம் கிடைத்தால் கணிசமான வருமானம் வரும். திரை உலகம் மொத்தமும் தினமலர் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.
ஆனால், அப்படி ஒரு சிறப்பு மலர் நான் வெளியிட மாட்டேன். எம்.ஜி.ஆர் செய்திகளை விரிவாக தினமலர் வெளியிடுவதற்கு காரணம், ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அவரது லட்சியம் தான். அந்த ஆதரவை ரூபாய், அணா, பைசா மதிப்பில் கணக்கிட்டால் லட்சியம் செத்துவிடும்.
இப்படி லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் எம்.ஜி.ஆரை தினமலர் தலையில் வைத்து ஆடியது என்று ஒரு முத்திரை குத்த வாய்ப்பு உண்டாகிவிடும்.
தினமலர் என்ற ஒரு முத்திரை தினமலருக்கு போதும். வேறு யாருடைய பெயரோடும் சேர்ந்த முத்திரை அவசியம் இல்லை. இதுமாதிரி செய்வது எம்.ஜி.ஆர். மற்றும் தினமலர் பற்றி வேண்டாத விமர்சனத்தை உருவாக்கிவிடும்” என்றார் டி.வி.ஆர்.
சொன்னதை எம்ஜிஆருக்கு தெரிவித்து விடுமாறு சீனியர் நிருபரை சென்னைக்கு அனுப்பினார். அவரும் எம்ஜிஆரை பார்த்து தயங்கி தயங்கி சொன்னார். ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்ஜிஆர், கலங்கிய கண்களுடன் நிருபரை பார்த்து, “இவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட பெரியவர் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் அக்கறையும் என்னை நெகிழ வைக்கிறது. அவருடைய நம்பிக்கையில் சிறு கீறலும் வராத வகையில் இந்த ராமச்சந்திரன் செயல்படுவான் என்ற உறுதிமொழியை அவருக்கு தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
எம்.ஜி.ஆரின் ஆசை
ஈரோடு பதிப்பை தொடங்கி வைத்த எம்ஜிஆர் தனது நெடுநாள் ஆசை ஒன்றை வெளியிட்டார்.
“தினமலர் திருநெல்வேலி பதிப்பை முதல் முறையாக படித்தபோதே, இது ஏன் இன்னும் சென்னையில் வரவில்லை என்று யோசித்தேன். சென்னையில் இருந்தும் தினமலர் வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.என்னால் செய்ய முடியாததை, வேறு சிலர் மூலமாக துாண்டிவிட்டு செய்யச்சொன்னேன். ஏதேதோ துாண்டி விடுகிறார்கள். நான் நல்லதைத்தான் தூண்டி விட்டேன். சென்னை துவக்க விழாவில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. அது எனது துரதிருஷ்டம். மற்ற வழிகளில் எனக்கு கிடைக்காத தகவல்களை, நான் தினமலர் மூலம் தெரிந்து கொள்வதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக பத்திரிகை இருக்க வேண்டும்.
அது உறுதிமிக்க பாலமாக இருக்க வேண்டும். தினமலர் அந்த பொறுப்பை சிறப்பாக செய்கிறது. முன்பிருந்த அரசு விளம்பரம் தரவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். அப்படி ஒரு வழி இருப்பதே எனக்கு தெரியாது. 'விளம்பரம் தந்தால் தாருங்கள்; இல்லையென்றால் விடுங்கள். நாங்கள் மக்களுக்கு சொல்வதை சொல்லிக் கொண்டுதான் இருப்போம்' என்று, தினமலர் கம்பீரமாக செயல்படுகிறது. தினமலரில் வரும் குழந்தைகள் படக்கதையை என் வீட்டு குழந்தைகளுக்கு காட்டி படிக்க வைக்கிறேன். வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு, பாசம் ஆகியவற்றை குழந்தை பருவத்திலேயே உணர்த்த வேண்டும். ஞாயிறுதோறும் வாரமலர் இணைப்பு தருவதை பார்த்து, பலரும் தனி மலர் தர ஆரம்பித்துள்ளனர்.
எனக்கு ஓர் ஆசை உண்டு. தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். உடல்நலம் பெற்று ஒரு விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கு நான் மாலை அணிவித்து மகிழ வேண்டும். அமர்ந்தபடியே அவர், 'வாழ்க' என்று என்னை வாழ்த்த வேண்டும் என்று விழாவில் தனது ஆசையை வெளியிட்டார் எம்ஜிஆர்.