ரூ.6,000 உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ரூ.6,000 உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : நவ 12, 2025 01:51 AM
சென்னை பராமரிப்பு உதவித்தொகையை, 6,000 ரூபாயாக உயர்த்தக்கோரி, தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் நடந்த போராட்டத்திற்கு, மாநில தலைவர் வில்சன் மற்றும் பொதுச்செயலர் ஜான்சிராணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜான்சிராணி கூறியதாவது:
ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக, மாதம், 6,000 முதல் 10,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும், 1,500 முதல் 2,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதுவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை என, இரு துறைகள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதனால், பலருக்கும் முறையாக சேர்வதில்லை.
இதுகுறித்து, பல கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாதாந்திர உதவித்தொகையை, 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மட்டுமே வழங்க வேண்டும். உதவித்தொகை உயர்வு குறித்து, தலைமை செயலருடன் இன்று பேச்சு நடத்தப்பட உள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

