தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி
தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி
UPDATED : ஜூலை 03, 2025 10:54 AM
ADDED : ஜூலை 02, 2025 11:45 PM

சென்னை ; குற்ற வழக்குகள் விசாரணைக்காக, தமிழக காவல் துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அனைத்தையும் கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை என்ற பெயரில், கோவில் காவலாளியை தனிப்படை போலீசார் அடித்து கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் எடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27; கோவில் காவலாளி. நகை மற்றும் பணம் திருடியதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை பிடித்து அடித்து, சித்ரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், 'மாநிலம் முழுதும் எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் செயல்பட்டு வரும் தனிப்படை போலீசார், குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள் மற்றும் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை கடுமையாக தாக்குகின்றனர்.
'அப்படித்தான், துாத்துக்குடி மாவட்டத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோரை அடித்துக் கொன்றனர். தற்போது அஜித்குமாரும் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, எஸ்.பி.,க்கள், துணை கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் என, பல்வேறு நிலைகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
காவல் துறை துவங்கிய காலத்தில் இருந்தே தனிப்படைகள் அமைத்து, குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரிக்கும் நடைமுறைகள் உள்ளன.
தற்போதும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் துவங்கி, எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ள அதிகாரிகளின் கீழ் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.
அவ்வாறு அமைக்கப்படும் தனிப்படைகள் நிரந்தரமாக செயல்படுவது தான், பிரச்னைக்கு வழி வகுக்கிறது. தனிப்படை போலீசார், அடியாட்கள் போலத்தான் செயல்படுகின்றனர். அடித்து, சித்ரவதை செய்து, உண்மையை வரவழைப்பது தான் தனிப்படை போலீசாரின் விசாரணை பாணி.
குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள், சந்தேக நபர்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும்; அவர்களை அடிப்பது போல நடித்து, உண்மையை கறப்பது எப்படி என போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள தனிப்படை போலீசார், வசூல் வேட்டைக்கு தான் பயன்படுத்தப்படுகின்றனர்; சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்காமல், அதிகாரிகள் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றும் அடியாட்களாகவே செயல்படுகின்றனர்.
இதனால், அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை உடனடியாக கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அது பற்றிய விபரங்களை, 24 மணி நேரத்திற்குள், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவு போலீசாரால், குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது மட்டும், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்களின் அனுமதி பெற்று, தனிப்படைகளை அமைக்கலாம்.
சிறப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் உத்தரவுகள் இன்றி, இனிமேல் தனிப்படைகளை அமைக்கக் கூடாது. அவர்களுக்கான விசாரணை பணிகள் முடிந்த உடனே தனிப்படையை கலைத்து விட வேண்டும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.