தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை கோரி தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை கோரி தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
ADDED : பிப் 16, 2024 02:33 AM
சென்னை:தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி அது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் கனகராஜ் தாக்கல் செய்த மனுவில் 'சென்னை உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.
'தமிழ் மொழி மேம்பாடு தொடர்பாக ஆய்வுகள் நடத்த புகழ்பெற்ற அறிஞர்கள் அடங்கிய நிரந்தக் குழுவை அமைக்க வேண்டும். அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும்' என்பன போன்றவை தொடர்பாக 2021ல் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி மத்திய மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு கடந்த 2022 ஜூலையில் தமிழ் வளர்ச்சி துறை தாக்கல் செய்த பதில் மனுவில் 'தமிழ் ஆராய்ச்சிக்கு 2013ல் உலக தமிழ் ஆராயச்சி நிறுவனம் 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது போல ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.
'திருவள்ளூர் ஆண்டு தமிழ் மாதம் ஆண்டு ஆகியவை அரசின் அனைத்து ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது. விருதுகள் நிதி உதவிகள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
'தமிழ் மொழி வளர்ச்சி மேம்பாட்டுக்கு 1971ல் தமிழ்மொழி வளர்ச்சி இயக்குநரகம் உருவாக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
'தமிழ் வளர்ச்சித் துறை 2019--- -- 20ல் ஒதுக்கீடு செய்த 70.91 கோடியில் 65.48 கோடி செலவிடப்பட்டது; 2020- - 21ல் ஒதுக்கீடு செய்த 63 கோடியில் 53.86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது' என குறிப்பிட்டிருந்தது.
வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது 'சுப்ரீம் கோர்ட் திட்டத்தின் கீழ் ஐகோர்ட் மற்றும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளை மாநில அரசு ஏற்கனவே துவங்கியுள்ளது.
'தமிழ் மொழி வளர்ச்சிக்கு என ஏற்கனவே மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை' எனக்கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.