தி.மு.க., -- காங்., தொகுதி பங்கீடு பேச்சு துவக்கம்: சுமுகமாக நடந்ததாக தலைவர்கள் அறிவிப்பு
தி.மு.க., -- காங்., தொகுதி பங்கீடு பேச்சு துவக்கம்: சுமுகமாக நடந்ததாக தலைவர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 29, 2024 05:21 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு, சென்னை அறிவாலயத்தில் நேற்று துவங்கியது. ''அடுத்த கட்ட பேச்சு, வரும் 9ம் தேதி நடத்தப்படும்,'' என, தி.மு.க., தொகுதி பங்கீட்டுக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
தி.மு.க.,வில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் நேரு, வேலு, பெரியசாமி, பன்னீர்செல்வம், பொன்முடி, ஆ.ராஜா, சிவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக காங்., தொகுதி பங்கீட்டு பேச்சுக்கான குழுவினர் நேற்று பிற்பகல், தி.மு.க., தலைமையகமான அறிவாலயம் சென்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் சென்றனர்.
தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சு நடத்தினர். இரு தரப்பிலும் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தப்பட்டது. இருப்பினும், எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்ற முடிவு, அக்கூட்டத்தில் எட்டப்படவில்லை. அடுத்தகட்டமாக பேச்சு நடத்த, இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின், காங்., தமிழக தலைவர் அழகிரி அளித்த பேட்டி:
தி.மு.க.,வுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சு திருப்திகரமாக இருந்தது. தேர்தலில், 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது? எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். தி.மு.க.,விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான், 'இண்டியா' கூட்டணியின் ஒரே நோக்கம். இவ்வாறு கூறினார்.
முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டி:
தி.மு.க., - காங்., நீண்ட காலமாக இருக்கும் கூட்டணி. இரு தரப்பினரும் இணைந்து நடத்திய முதற்கட்ட பேச்சு சுமுகமாக இருந்தது. மக்களின் நம்பிக்கையை பெறுவது; ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது; அரசியலமைப்பு சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை, ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து தான், கூட்டத்தில் முக்கியமாக விவாதித்தோம்.
பிரிவினை சக்திகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரைப் போன்றவர்கள் கூட்டணியில் இருந்து வெளியே செல்வர். இண்டியா கூட்டணி ஒவ்வொரு நாளும் வலுவானதாக மாறும். இவ்வாறு கூறினார்.
டி.ஆர்.பாலு அளித்த பேட்டி:
நிதீஷ் குமார் விலகியதால் இண்டியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. ஹிந்தி பேச வேண்டும் என நிதீஷ் குமார் கூறியபோது கூட, கூட்டணிக்காக நாங்கள் அமைதியாக இருந்தோம்.
பிரதமராக வேண்டும் என நிதீஷ் குமார் கூறவில்லை. அவர் எந்த திட்டங்களையும் இண்டியா கூட்டணிக்கு தரவில்லை. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சு, 9ம் தேதி நடக்கும். முதல் கட்ட பேச்சு சுமுகமாக நடந்தது. இவ்வாறு கூறினார்.
அமைச்சர் பெரியசாமி கூறுகையில், ''இன்னும் 10 நாட்களில் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு நிறைவு பெறும்,'' என்றார்.