தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : மார் 18, 2025 08:16 PM
சென்னை:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க.,வின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த புகழேந்தி மறைவை அடுத்து, அத்தொகுதிக்கு கடந்தாண்டு ஜூலையில் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால், சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை நிராகரிக்க கோரி, அன்னியூர் சிவாவும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.