ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பழனிசாமிக்கு எதிராக தி.மு.க., வழக்கு
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பழனிசாமிக்கு எதிராக தி.மு.க., வழக்கு
ADDED : அக் 25, 2024 09:56 PM
சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவரை, தி.மு.க., உடன் தொடர்புபடுத்தியதால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, தி.மு.க., சார்பில், அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:
அரசியல் கட்சியில் பொறுப்பு வகிக்கும் பழனிசாமிக்கு, 'எக்ஸ்' வலைதளம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பலவற்றில் கணக்குகள் உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்திகள், எங்கள் கட்சியை அவதுாறு செய்யும் விதத்தில் உள்ளன.
தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதோடு, போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறுவதாகவும், போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, தி.மு.க.,வில் அங்கீகாரம் அளித்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவதுாறான பதிவால், பொதுமக்களின் பார்வையில் எங்கள் கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்த, பழனிசாமி முயற்சிக்கிறார். ஜாபர் சாதிக்கின் நடவடிக்கையில், அரசியல் கட்சி என்ற முறையில் தி.மு.க.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜாபர் சாதிக் கைது செய்யப்படுவதற்கு முன், பிப்ரவரி 25ல், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
உள்நோக்கத்துடன், கட்சியை அவதுாறு செய்யும் விதத்தில், இத்தகைய பதிவை பழனிசாமி வெளியிட்டுள்ளார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, வேண்டுமென்றே இவ்வாறு கூறியுள்ளார். எனவே, இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க, பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும். 'எக்ஸ்' தளத்தில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும். ஜாபர் சாதிக்கையும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும், தி.மு.க.,வோடு தொடர்புபடுத்தி பேச, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி டீக்காராமன் முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, நவம்பர் முதல் வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.