'டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் வெட்கப்படாத தி.மு.க., அரசு'
'டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் வெட்கப்படாத தி.மு.க., அரசு'
ADDED : பிப் 05, 2025 07:09 PM
சென்னை:சேலம் ஆத்துார் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டையே உலுக்கிய மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்து, தி.மு.க., அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
'காவல் துறைக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்' என, கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு, கள்ளச்சாராய விற்பனையையும் லஞ்சத்தையும் நிறுவனமயப்படுத்தி உள்ளதற்கு, தி.மு.க., அரசு வெட்கப்பட வேண்டும்.
போதாக்குறைக்கு, 'தி.மு.க., கட்சிக்காரன்' எனும் அடையாளம் வேறு. தி.மு.க., என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா; அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல் துறை கண்டு கொள்ளாதா? முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது, தி.மு.க., கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் அக்கட்சியினர் செய்வதற்கு தானா?
இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய அனைவரையும், உடனடியாக கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.