தி.மு.க., ஆலமரம்; அதனையாராலும் வீழ்த்த முடியாது * அமைப்பு செயலர் பாரதி பேட்டி
தி.மு.க., ஆலமரம்; அதனையாராலும் வீழ்த்த முடியாது * அமைப்பு செயலர் பாரதி பேட்டி
ADDED : மார் 29, 2025 07:33 PM
உச்சிப்புளி:''தி.மு.க., ஒரு ஆலமரம்; அது பலமாக உள்ளதால் யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.4034 கோடி வழங்காமல் உள்ளது. அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 1134 இடங்களில் நுாறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார்.
பின் அவர் கூறியதாவது:
வரும் 6ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. நுாறு நாள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கி விட்டு, பிரதமர் தமிழகம் வர வேண்டும். தி.மு.க., ஒரு ஆலமரம் என்பதால், அதை யாராலும் வீழ்த்த முடியாது. புதியதாக கட்சி துவங்கும் அனைவரும் தி.மு.க.,வை தாண்டிதான் அரசியல் செய்ய முடியும். தி.மு.க., பலமாக இருப்பதால், அதை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.