ADDED : ஜூலை 12, 2025 03:04 AM
சென்னை: 'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை இயக்கம் வாயிலாக, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, தி.மு.க., சேர்த்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1ம் தேதி, 'ஓரணியில் தமிழகம்' என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பிரசார இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து, 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று, அங்குள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க, தி.மு.க., இலக்கு வைத்து உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 10ம் தேதி வரை, 61 லட்சத்து, 98,640 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக, 38 லட்சத்து, 75,112 பேர் சேர்க்கப்பட்டனர். குடும்பம் குடும்பமாக, 26 லட்சத்து 24,283 பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழகம் முழுதும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளின் பட்டியலில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி முதலிடம் பிடித்துள்ளது. அத்தொகுதியில், 90,418 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இரண்டாவதாக, கம்பம் தொகுதியில், 86,596 உறுப்பினர்களும், மூன்றாவதாக கரூர் தொகுதியில், 84,167 உறுப்பினர்களும் சேர்ந்துள்ளனர்.
நான்காவதாக, துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில், 78,431 உறுப்பினர்களும், ஐந்தாவதாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், 77,396 உறுப்பினர்களும் சேர்ந்துஉள்ளனர்.
ஒட்டுமொத்த உறுப்பினர் சேர்க்கையில், தென் மாவட்டங்களே முன்னணியில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த தகவல் வெளியானதும், ஏற்கனவே செல்வாக்கு சரிவில் இருக்கும் அ.தி.மு.க., தரப்பு அச்சமடைந்திருப்பதாகவும் தி.மு.க., தரப்பில் சந்தோஷமாக கூறுகின்றனர்.