தி.மு.க., அரசிடம் மோதாமல் தமிழக கவர்னர் ரவி...தனி ரூட்! மத்திய அரசு திட்டங்களை பிரபலப்படுத்த தினம் ஒரு நிகழ்ச்சி
தி.மு.க., அரசிடம் மோதாமல் தமிழக கவர்னர் ரவி...தனி ரூட்! மத்திய அரசு திட்டங்களை பிரபலப்படுத்த தினம் ஒரு நிகழ்ச்சி
UPDATED : அக் 07, 2024 02:07 AM
ADDED : அக் 06, 2024 11:13 PM

தமிழக அரசுடன் மோதாமல் கவர்னர் ரவி தனி ரூட்டில் பயணிப்பதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல, தினம் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கவர்னர் அலுவலகத்திற்கு வரும், பொது மக்களின் புகார்கள் குறித்து, அதிகாரிகளிடம் அவரது அலுவலகம் நேரடி விசாரணை நடத்தும் தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்ற நாளில் இருந்து, அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்தினார். அரசை நோக்கி கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். அரசு பரிந்துரைத்து அனுப்பிய சட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்தார்.
அடிக்கடி ஆலோசனை
வேந்தர் என்ற முறையில், தமிழக பல்கலைகளின் நிர்வாகத்தின் மீதும் தீவிர கவனம் செலுத்தினார். துணை வேந்தர் நியமனங்களில் தலையிட்டு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தினார்.
இதற்காக, அவரே நேர்காணலும் நடத்தினார். அதைத்தொடர்ந்து, துணை வேந்தர்களை அழைத்து அடிக்கடி ஆலோசனை கூட்டங்களும் நடத்தி வந்தார்.
இது ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கவர்னர் தன் வழக்கமான பணிகளில் இருந்து விலகிச் செல்வதாகவும், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுவதாகவும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் குரல் எழுப்பப்பட்டது. கவர்னருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்ட போதிலும், கவர்னர் தன் செயல்பாடுகளை தொடர்ந்தார்.
மற்ற கவர்னர்கள் போல இல்லாமல், நிறைய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் துவங்கினார். அதில், மறைமுகமாக அரசியல் கருத்துக்களை வலியுறுத்தினார். தி.மு.க.,வின் அடிப்படை சித்தாந்தத்தை விமர்சித்தார்.
விளக்கம் கேட்டார்
ஒரு கட்டத்தில், சட்டம் - ஒழுங்கு விவகாரங்களிலும் தலையிட துவங்கிய கவர்னர், அவ்வப்போது டி.ஜி.பி., மற்றும் உள்துறை அதிகாரிகளை அழைத்து பேசுவதையும் வாடிக்கையாக்கினார்.
கள அறிக்கை அடிப்படையில், அவர்களிடம் பல விஷயங்களுக்கும் விளக்கம் கேட்டார். இதற்கிடையில், சனாதன தர்மத்தை துணை முதல்வர் உதயநிதி எதிர்த்து பேச, போகும் இடமெல்லாம் சனாதனத்துக்கு ஆதரவு குரல் கொடுத்ததுடன், திராவிட இயக்கங்களை நேரடியாக எதிர்த்தார்.
இப்படி இரு தரப்புக்கும் இடையில் முட்டல், மோதல்கள் நீடித்து வந்த நிலையில், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
ஆனாலும், மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால், தி.மு.க., அரசு நினைத்தபடி எதையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக, திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியில் கைவைத்தது மத்திய அரசு.
இதனால், சீரான நிர்வாகம் செய்வதில், தமிழக அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை தவிர்க்க நினைத்த தி.மு.க., தரப்பு, அதற்கான வேலைகளில் இறங்கியது. இதையடுத்தே, டில்லியில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடந்தது. அதன் பலனாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்க, மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
டில்லிக்கும் சென்னைக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கவர்னர் தற்போது தனக்கென தனிப்பாதை வகுத்து பயணிக்கத் துவங்கி இருக்கிறார். மத்திய அரசின் மக்கள் நலன் திட்டங்கள் குறித்து பாராட்டி பேசும் கவர்னர், தினம்தோறும் ஒரு நிகழ்ச்சி என திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருப்பதாக, ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.
வள்ளலார் பிறந்த நாளுக்கு தனி நிகழ்ச்சி நடத்தி, அதில் வள்ளலார் புகழ் பாடிய கவர்னர், 'சனாதனத்தை ஜாதியுடன் ஒப்பிட்டுப் பேசி தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடாது' என்றார்.
தமிழகம் முழுதும் 75வது சுதந்திர நாளை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தின் வலிமையை இளைஞர்களும் உணர வேண்டும் என்பதற்காக, பள்ளி, கல்லுாரி மாணவர், மாணவியருக்கான கட்டுரை போட்டிகள், கவர்னர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டன.
இதற்காக, கல்லுாரிகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டு, கட்டுரைகள் வரவேற்கப்பட்டன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டுரைகள் அனுப்பி உள்ளனர். சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது
அடுத்த கட்டமாக, கம்பராமாயணத்தை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருக்கிறார் கவர்னர் ரவி. இதற்காக, மாநிலம் முழுதும் 10 மையங்களில், மாணவர், மாணவியர் கலந்து கொள்ளும் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடக்கவிருக்கின்றன
கவர்னர் அலுவலகத்துக்கு வரும் புகார் கடிதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளை பணித்திருக்கிறார் ரவி. அவர்களும், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் என நேரடியாக பேசுகின்றனர். புகார்கள் மீது உடடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகின்றனர்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் கேட்டறிகின்றனர். தி.மு.க., தலைமைக்கு இந்தத் தகவல் தெரிந்தும், சமீப காலமாக கவர்னர் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. கவர்னர் அலுவலக கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவு பறந்திருக்கிறது.
இப்படி கவர்னர் தனி ரூட்டில் பயணிப்பதை, தி.மு.க., அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
- நமது நிருபர் --