திருவண்ணாமலையில் நாளை தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு
திருவண்ணாமலையில் நாளை தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு
ADDED : டிச 13, 2025 05:53 AM

தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடக்க இருந்த, ஐந்து மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, மூன்று மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. முதல் மாநாடு, திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், 'வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டு உள்ளது.
சர்வே முடிவு
இந்த தேர்தலில், நடிகர் விஜய் புதிதாக துவங்கியுள்ள த.வெ.க., போட்டியிடுவதால், அக்கட்சிக்கு இளம் தலைமுறையினர் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவு பெருகி வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டுகளை, த.வெ.க., அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளதாக சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே, தேர்தல் பணிகளில், தி.மு.க., இளைஞர் அணி பங்களிப்பை அதிகரிக்க, துணை முதல்வரும், இளைஞர் அணி செயலருமான உதயநிதி விரும்பினார். அதன்படி, அனைத்து பூத் கமிட்டிகள் மற்றும் கட்சி அமைப்பு ரீதியாக உள்ள, அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை போன்ற நிர்வாகத்தில், இளைஞரணிக்கு புதிதாக, 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
5 மண்டலங்கள்
அவர்களை சந்தித்து, சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்த, உதயநிதி உத்தரவிட்டுள்ளார். சென்னை மண்டலம் தவிர, வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலங்கள் என, ஐந்து மண்டலங்களாக பிரித்து, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த, இளைஞரணி தரப்பில் திட்டமிடப்பட்டது.
தற்போது அத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஐந்து மண்டலங்களை மூன்று மண்டலங்களாக பிரித்து, மாநாடுகள் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 91 சட்டசபை தொகுதிகள் அடங்கிய, வடக்கு மண்டல மாநாடு, திருவண்ணாமலையில் நாளை நடக்க உள்ளது.
இம்மாநாட்டில், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை, கோவை
வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், 1.25 லட்சம் நாற்காலிகள் போடப்பட உள்ளன. அம்மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதைத்தொடர்ந்து, வரும் ஜன., 3ம் தேதி மதுரை மண்டல மாநாடு; ஜனவரி மாத இறுதியில் கோவை மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளது.
- நமது நிருபர் -

