'சென்ஸிட்டிவ்' விவகாரத்தில் அரசியல் செய்வதா? இ.பி.எஸ்.,சுக்கு மந்திரி கண்டனம்
'சென்ஸிட்டிவ்' விவகாரத்தில் அரசியல் செய்வதா? இ.பி.எஸ்.,சுக்கு மந்திரி கண்டனம்
ADDED : டிச 30, 2024 11:56 PM

சென்னை: 'கல்லுாரி மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்' என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: படிக்க வரும் கல்லுாரி மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோரிடமும், தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.,வின் பழனிசாமி நடந்து கொண்டிருப்பது, உண்மையிலே அருவருக்கத்தக்க செயல்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னால் இருந்து செயல்பட்ட அ.தி.மு.க., பிரமுகர்களை காப்பாற்றவும், அ.தி.மு.க., இளைஞர் அணியின் பொள்ளாச்சி நகரச் செயலராக செயல்பட்டு வந்த, முக்கிய குற்றவாளி அருளானந்தத்தை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட பெண்களை, அ.தி.மு.க.,வினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை, தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
புதுமைப்பெண் திட்டம், பெண்கள் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என, பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும், ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் முதல்வர் மீதும், ஆட்சி மீதும் என்ன அவதுாறு பரப்பினாலும், அதை தமிழக மக்கள் துளியும் நம்பப் போவதில்லை.
மாணவியின் புகாரை பெற்றதும், விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, தேவையின்றி அரசியல் செய்வதையும், வதந்திகளை பரப்பி, மாணவியரின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த, 'சென்ஸிட்டிவ்' விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும், மாண்பையும், பழனிசாமி குழிதோண்டி புதைத்து விட்டார். அவரது அற்பத்தனமான செயலை, தமிழக மக்கள் என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.