ADDED : நவ 14, 2024 12:38 AM
துணை முதல்வர் உதயநிதி: தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். டாக்டர் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினோம். இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்களுக்கு, அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: இந்த மருத்துவமனைக்கு அருகில் தான் கிண்டி காவல் நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தினமும் 2,000க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல், டாக்டரை பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அந்நபர் பலமுறை வந்திருக்கிறார். அவரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், அவர் மீது எவ்வித சந்தேகம் ஏற்படவில்லை.
* சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: கத்தி குத்து தொடர்பாக, கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள் உள்ளன. மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*மத்திய இணை அமைச்சர் முருகன் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கின்றன என்பதற்கு உதாரணம் இது. நிர்வாக திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே, இந்த அரசு கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் டாக்டர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என, யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது.

