டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு
டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு
UPDATED : மே 16, 2025 11:12 PM
ADDED : மே 16, 2025 07:38 AM

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது.
. பல கட்ட சோதனைக்கு பின்னர் இன்று மதியம் 3 மணியளவில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை அமலாக்க துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கு தொடர்பாக, வழக்கு தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டிலும் , சென்னை சூளைமேடு கல்யாணப்புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே.மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை முடிந்தது.
ஆகாஷ் வீட்டில் சோதனை!
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த, இவரது இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.

