அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி
அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி
ADDED : டிச 16, 2025 05:25 AM

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ்குமார் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.
இடைக்கால தடை
அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்த பொருளை ஒப்படைக்க வேண்டும் என, ஜூன் 20ல் உத்தரவிட்டு, அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்தது.
மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தடை விதித்த பின்னும், டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில், வழக்கறிஞர் கே.எம்.காளிசரண் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'அட்ஜூடிக்கேட்டிங் அத்தாரிட்டி' அமைப்பின் தலைவர் பிரதீப்குமார் உபாத்யாய், பதிவாளர் நஸ்ரின் சித்திக், அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ்குமார் மட்டும் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ஆஜராகவில்லை
இதையடுத்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், 'அட்ஜூடிக்கேட்டிங் அத்தாரிட்டி தலைவர் பிரதீப்குமார் உபாத்யாய், பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் ஏன் ஆஜராகவில்லை' என, கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை. நீதிமன்றம் தடை விதித்ததும், மேல் நடவடிக்கையை நிறுத்தி விட்டோம்.
'அதிகாரிகள் மீது எவ்வித தவறும் இல்லை. எங்கள் தரப்பு வாதத்தை கேட்டு முடிவு செய்யலாம்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'பிரதீப்குமார் உபாத்யாய், பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் எனக் கூறி, ஜன., 19ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

