பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனப் போக்கு; இ.பி.எஸ்., அண்ணாமலை கண்டனம்
பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனப் போக்கு; இ.பி.எஸ்., அண்ணாமலை கண்டனம்
ADDED : ஜன 04, 2025 01:43 PM

சென்னை: பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கு உடன் தி.மு.க., அரசு செயல்படுகிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன்; இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
அண்ணாமலை
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.