ADDED : ஜன 17, 2025 02:39 AM
ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜன., 10ல் வேட்பு மனுத்தாக்கல் நடந்தது. தொடர் விடுமுறையால், 10, 13ல் மனுத்தாக்கல் நடந்தது. இதில் சுயேட்சைகளாக, 9 பேர், 10 வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இன்று மதியத்துடன் மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. மதியம், 3:00 மணியுடன் மனுத்தாக்கல் முடிகிறது. தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, 88 வேட்பு மனு படிவங்களை பெற்று சென்றதில், ஒன்பது வேட்பாளர்கள் சார்பில், 10 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் வந்தாலும், விரைவான மனுத்தாக்கலுக்கு தயார் நிலையில் உள்ளோம்.
மதியம், 2:30 மணிக்கு அறிவிப்பு செய்வோம். 3:00 மணி வரை மட்டுமே மனுக்கள் பெறப்படும். மாநகராட்சி ஆணையர் அறை உள்ள வளாகத்துக்குள் வந்து, மனுதாக்கலுக்கு வந்த விபரத்தை தெரிவித்து, டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவர்கள் மனு மட்டுமே ஏற்கப்படும். நாளை வேட்பு மனு பரிசீலனை நடக்கும். ஜன., 20ல் மனு வாபஸ் பெறுதலும், இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் அறிவிப்பு செய்யப்படும்.
இவ்வாறு கூறினர்.
கடந்த, 2023 பிப்.,ல் நடந்த கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி என, 96 வேட்பாளர்கள், 121 மனு தாக்கல் செய்தனர். இதில், 38 மனுக்கள் தள்ளுபடியாகி, 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆறு மனு வாபஸ் பெறப்பட்டு, 77 பேர் களத்தில் இருந்தனர்.