ADDED : ஆக 17, 2025 02:14 AM
சென்னை:நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கூட, நீதிமன்றம் போகும் நிலைமை இருப்பதாக, தி.மு.க., அரசுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், வன்முறையாளர், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்டவர்களால் ஏற்படும் ஆபத்தை தாண்டி, மாடுகள், நாய்கள் என, பல ரூபங்களில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதைத் தடுப்பதற்கு, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையும், தி.மு.க., அரசு மேற்கொள்ளவில்லை.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் உள்ளன. ஆனால், 11,200 நாய்கள் விபரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தவிர, தெரு நாய்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. நாய்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் என்பது, பெயரளவில் மட்டுமே உள்ளது.
தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையால், தெருக்களில் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாய்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கூட நீதிமன்றம் செல்லும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனை. கடந்த ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த அளவுக்கு அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.