எங்களையும் சுட அனுமதிக்க வேண்டும் * ஆதங்கத்தில் விவசாயிகள்
எங்களையும் சுட அனுமதிக்க வேண்டும் * ஆதங்கத்தில் விவசாயிகள்
ADDED : ஜன 10, 2025 11:43 PM
விருதுநகர்:தமிழகத்தில் வனத்துறையில் ஆள் பற்றாக்குறையுள்ள நிலையில் அவர்கள் காட்டுப்பன்றியை சுடுவது கண்துடைப்பான நடவடிக்கையாக அமையும் என விவசாயிகள் ஆதங்கமுற்றனர்.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில் காட்டுப்பன்றிகள் காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம் என அத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
ஆனால் வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் இது சாத்தியமில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வனப்பரப்பை தாண்டியும் கண்மாய்களின் கருவேல மர கூட்டங்களுக்கு மத்தியில் தான் காட்டுப்பன்றிகள் அதிகளவில் வசிக்கின்றன. வன பரப்பை விட்டு வெளியே தான் காட்டுப்பன்றிகள் அதிகம் திரிகின்றன.
வேட்டை தடுப்பு காவலர்கள், வனச்சரகர்கள் பற்றாக்குறை வனத்துறையில் உள்ளது. மேலும் காட்டுப்பன்றிகளை சுடுவது சாதாரண காரியமல்ல. இரவில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சூறையாடுகின்றன.
காட்டுப்பன்றிகள் தொல்லை நிலவும் அதே சூழலில் தான் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் யானைகளின் தொல்லையும் உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
வனத்துறை அமைச்சரின் அறிவிப்பு கண்துடைப்பாக உள்ளது. ஆள் பற்றாக்குறையால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிப்பது சாத்தியமில்லை. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கும். கேரளாவை போல அவற்றைச் சுட, எங்களையும் அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

