ADDED : ஜன 31, 2025 10:39 PM
சென்னை:'கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்திலான அதிகாரியை, வேளாண்துறை செயலராக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக வேளாண் துறை செயலராக உள்ள அபூர்வா, இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். புதிய செயலரை தமிழக அரசு நியமிக்க உள்ளது.
மத்திய அரசின் கொள்கை அடிப்படையில், நிதி, உணவு, நீர்வளம், கூட்டுறவு, வருவாய், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் வகையில், வேளாண் துறை செயலர் நியமிக்கப்பட வேண்டும்.
வேளாண் உற்பத்தி ஆணையர் என்ற பதவி உள்ளது. இப்பதவியில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலராக, ஒரே அதிகாரியை நிமிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
சார்புடைய மற்ற துறைகளுக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்திலான செயலர்களை நியமிக்கும் போது, வேளாண் துறைக்கும் அதேபோல அதிகாரியை நியமிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், வேளாண் உற்பத்தி ஆணையர் பதவிக்கு, தனி அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.