நடிகர் ரவி மோகனிடம் ரூ.6 கோடியை திரும்ப கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு
நடிகர் ரவி மோகனிடம் ரூ.6 கோடியை திரும்ப கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு
ADDED : ஜூலை 16, 2025 12:14 AM
சென்னை:படத்தில் நடிப்பதற்காக வாங்கிய, 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப அளிக்கக்கோரி, 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனம், தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் அளிக்கும்படி, நடிகர் ரவி மோகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரன் தாக்கல் செய்த மனு:
எங்கள் நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க, நடிகர் ரவி மோகனுடன், 2024 செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்திற்கு ஊதியமாக, 15 கோடி ரூபாய் பேசப்பட்டு, 6 கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஒப்பந்தப்படி, எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், மற்ற நிறுவன படங்களில் நடித்தார்.
பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், முன் பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், பணத்தை கொடுக்கவில்லை.
அதேநேரம், சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் துவக்கி, அதன் வாயிலாக, ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ''எங்கள் நிறுவனம் அளித்த முன்பணத்தை, ரவி மோகன் அவரது சொந்த படத் தயாரிப்புக்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளது.
''எனவே, ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, தடை விதிக்க வேண்டும். வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்க, ரவி மோகனுக்கு தடை விதிப்பதுடன், 6 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '6 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மை தான். ஆனால், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை துவங்காததால், அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக, கூடுதலாக, 10 கோடி ரூபாயை, 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனம் வழங்க வேண்டும்' என, வாதிட்டார்.
இதையடுத்து, மனு குறித்து பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.