போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் இலங்கையை சேர்ந்த 5 பேருக்கு சிறை
போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் இலங்கையை சேர்ந்த 5 பேருக்கு சிறை
ADDED : பிப் 08, 2025 10:43 PM
சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் பெற்று, கனடா செல்ல முயன்ற வழக்கில் கைதான இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில், போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் தயாரித்து விற்கப்படுவதாக, 2019ல், சென்னை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலி ஆவணங்கள், பாஸ்போர்ட் தயாரித்து விற்கும் கும்பலை பிடிக்க, மாநிலம் முழுதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலி ஆவணங்கள் தயாரிப்பில் மூளையாக செயல்பட்ட திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் பெற்ற இலங்கையை சேர்ந்த நிஷாந்தன், நிமலன், ஹரிகரன், சுரேந்திரன், பிரணவன்; போலி ஆவணங்கள் வாயிலாக பாஸ்போர்ட் தயாரித்து விற்க உதவியதாக, தரகர்கள், காவல் துறை அதிகாரிகள் என, 45 பேர் மீது, 2019ல் கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் இரண்டாவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் எஸ்.இந்துலதா முன் நடந்து வருகிறது. அப்போது, நிஷாந்தன், நிமலன், ஹரிகரன், சுரேந்திரன், பிரணவன் ஆகியோர், குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கூறி, குறைந்த தண்டனை விதிக்கக்கோரி, பேர மனு தாக்கல் செய்தனர்.
கியூ பிரிவு சார்பில் சிறப்பு பிளீடர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி வாதாடியதாவது:
நாட்டின் மதிப்புமிக்க ஆவணங்களை போலியாக உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இந்திய குடிமகன் என, போலியாக சான்றிதழ் தயாரித்து, பாஸ்போர்ட் பெற்று, கனடா தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீதான சட்டப் பிரிவுகளை, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நிமலன், நிஷாந்தன் ஆகியோர் மீது, ஏற்கனவே வழக்குகள் உள்ளன. முகாமில் இருந்த நாட்களை சிறை தண்டனையாக கருதக்கூடாது; எந்த கருணையும் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அதை ஏற்ற மாஜிஸ்திரேட், நிஷாந்தன், நிமலன், ஹரிகரன், சுரேந்திரன், பிரணவன் ஆகியோரின் பேர மனுவை தள்ளுபடி செய்ததோடு, அனைவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனையும், 65,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.