'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கு வாதத்தை கூற பிப். 7 வரை அவகாசம்
'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கு வாதத்தை கூற பிப். 7 வரை அவகாசம்
ADDED : பிப் 02, 2024 01:26 AM

விழுப்புரம்:விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வரும் மேல் முறையீட்டு வழக்கில் மாஜி டி.ஜி.பி. தனது தரப்பு வாதத்தை வரும் 7ம் தேதி வரை தெரிவிக்க நீதிபதி அவகாசம் வழங்கினார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 2 ஆண்டு சிறையும் புகார் அளிக்க சென்ற பெண் அதிகாரியின் காரை மறித்த முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது.
அதை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அதை தொடர்ந்து நேற்று முன்தினம்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் 'இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
அதன் மீதான உத்தரவு வரும் வரை எங்கள் வாதத்தை முன்வைக்க 4ம் தேதி வரை அவகாசம்'கோரினார்.அதற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா 'பலமுறை அவகாசம் வழங்கியும் வாதத்தை முன்வைக்கவில்லை. மேலும் அவகாசம் வழங்க முடியாது. நாளை (நேற்று) பிப்.1ம் தேதி உங்கள் வாதத்தை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
அதன்படி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேஸ்தாஸ் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை காலை 10:45 மணி முதல் 11:53 வரை எடுத்துரைத்தார். அப்போது என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்னை சதி வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி 'வழக்கில் உங்கள் தரப்பு வாதங்களை தொடர்ந்து கூறி முடிக்க வேண்டும்' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட ராஜேஷ் தாஸ் 'சென்னையில் இருந்து கார் மூலம் 3 மணி நேரம் பயணித்து வருவதாகவும் உடல் நலன் கருதி என் வாதத்தைக் கூற கால அவகாசம் வேண்டும்' என கோரினார்.
இதையேற்று கொண்ட நீதிபதி ராஜேஷ்தாஸ் அவர் தரப்பு வாதங்களைக் கூற இன்று 2ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

