மறுமணம் செய்த பெண்ணிடம் குழந்தைக்கு பராமரிப்புத்தொகை: முன்னாள் மாமனார் வழக்கு தள்ளுபடி
மறுமணம் செய்த பெண்ணிடம் குழந்தைக்கு பராமரிப்புத்தொகை: முன்னாள் மாமனார் வழக்கு தள்ளுபடி
ADDED : நவ 19, 2025 07:58 AM

மதுரை: குழந்தைக்கு பராமரிப்புத் தொகை வழங்க மறுமணம்செய்துகொண்ட அவரது தாய்க்கு உத்தரவிடக்கோரி முன்னாள் மாமனார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஒரு கணவன், மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றனர். இருவரும் வெவ்வேறு நபர்களை மறுமணம் செய்து கொண்டனர். தந்தை வழி தாத்தா, பாட்டி குடும்ப பராமரிப்பில் குழந்தை வளர்கிறார். குழந்தைக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையை தந்தை வழங்குகிறார். குழந்தையின் பெயரில் பணம் டெபாசிட் செய்துள்ளார்.இன்சூரன்ஸ் செலுத்துகிறார்.
குழந்தையின் பராமரிப்பு செலவை சமாளிக்க பராமரிப்புத் தொகை வழங்க தாய்க்கு உத்தரவிடக்கோரி தந்தை வழி தாத்தா சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்நீதிமன்றம்,'தந்தைவழி தாத்தா இயற்கையான பாதுகாவலர் அல்ல. அவர் மனு தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை. குழந்தையின் இயற்கையான பாதுகாவலரான தந்தை உயிருடன் உள்ளார். அவர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து குழந்தையின் சார்பில் அவரது தந்தை வழி தாத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: கணவன், மனைவி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுள்ளனர். சட்டப்பூர்வமாக புதிய பாதைகளை தேர்ந்தெடுத்த பெற்றோரை அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும். அதே நேரம் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட முறையில் குழந்தையின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தாயின் அமைதியான புது குடும்ப வாழ்க்கையை தொந்தரவு செய்யும் வகையில் தவறாக புரிந்து கொண்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணம் தொடர்பாக முடிவுக்கு வந்த விவகாரத்தை மீண்டும் திறக்க பராமரிப்பு விதிகளை தவறாக பயன்படுத்துவதை இந்நீதிமன்றம் நிராகரிக்கிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

