ADDED : ஆக 13, 2025 03:44 AM
சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்குவதற்கான டெண்டரில், இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு வரை வழங்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், கல்லுாரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக, தமிழக அரசின் 'எல்காட்' நிறுவனம், சர்வதேச டெண்டர் அறிவிப்பை, கடந்த மே 23ம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முன்வந்தன. அதில், 'டெல்' மற்றும் 'ஏசர்' நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஏசர் நிறுவனம், ஒரு லேப்டாப், 23,385 ரூபாய் விலையில், 14 அங்குல திரையுடனும், டெல் நிறுவனம் ஒரு லேப்டாப், 40,828 ரூபாய் விலையில், 15.6 அங்குல திரையுடன் வழங்க உள்ளது.
இம்மாத இறுதிக்குள் கொள்முதல் ஆணை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.