கூட்டுறவு வங்கியில் 'கவசம்' காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு
கூட்டுறவு வங்கியில் 'கவசம்' காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு
ADDED : பிப் 01, 2025 10:19 PM
சிவகங்கை:தமிழக கூட்டுறவு வங்கிகளில், 'கவசம்' என்ற பெயரில் ஆயுள், சொத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கீழ், 51 கிளைகள், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, 932 கிளைகள், 4,532 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.
கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மகளிர் குழு, பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிகள் வாயிலாக காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, 'கவசம்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய லைசென்ஸ் பெற்று நடத்தப்படும்.
இதற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், இப்கோ டோக்கியோ, எல்.ஐ.சி., - எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால், அனைத்து கூட்டுறவு வங்கிகளில் ஆயுள், பொது, மருத்துவம், பயணம், சொத்து, வணிகம், விபத்து காப்பீடு என, பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை குறைந்த காப்பீடு கட்டணத்தில் செயல்படுத்த உள்ளனர்.
கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் பெற்ற கடனுக்கு ஈடாக காப்பீடு செய்வதால், வங்கிக்கான நிதி இழப்பு தவிர்க்கப்படும்.
நஷ்டத்தில் இயங்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தினால், வருவாய் பெற்று, வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தர முடியும்.
இதனால், கூட்டுறவு வங்கிகள் நிதி சாரா வருமானத்தை ஈட்ட முடியும். இதற்கான பூர்வாங்க பணிகளை கூட்டுறவு வங்கிகளில் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.