அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கூரை இடிந்தது; நோயாளிகள் தப்பினர்
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கூரை இடிந்தது; நோயாளிகள் தப்பினர்
UPDATED : ஜூன் 02, 2025 11:52 AM
ADDED : ஜூன் 02, 2025 11:41 AM

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மருத்துவமனையின் நுழைவுப்பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.
விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர காரணங்களால் சிகிச்சைக்கு வருவோருக்கு, இங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பர். அதன்பின், நிலைமைக்கேற்ப வேறு வார்டுகள் அல்லது மருத்துவமனைகளுக்கு அனுப்புவது வழக்கம்.
இரு நாட்களுக்கு முன் அதிகாலையில், இந்த வார்டின் கூரைப்பகுதியில் இருந்த கான்கிரீட் கூரை பெயர்ந்து வார்டில் இருந்த படுக்கை மீது விழுந்தது. அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லை. அதனால், மருத்துவ ஊழியர்களும் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
கூரை இடிந்து விழுந்ததால், கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டு, கட்டடம் எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. சில மாதங்களுக்கு முன் இதேபோல் நோயாளிகள் இருந்தபோது, மற்ற வார்டுகளிலும் கூரை இடிந்தது.
நோயாளிகளின் பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடங்களை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.