பதவி நீக்கப்பட்ட கவுன்சிலர்கள் வார்டுகளில் தேர்தல் நடத்தப்படாது ஐகோர்ட்டில் அரசு தகவல்
பதவி நீக்கப்பட்ட கவுன்சிலர்கள் வார்டுகளில் தேர்தல் நடத்தப்படாது ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஏப் 25, 2025 12:30 AM
சென்னை:'பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின், 189வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும், 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகத் துறை செயலர், கடந்த மாதம், 27ல் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில், 'தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள், நேற்று நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு சார்பில், 'இந்த வழக்குகள் முடியும் வரை, நான்கு கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது என, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், மாநில தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்' எனக்கூறி, அந்த கடிதத்தின் நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை, ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

