1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு
1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு
ADDED : நவ 04, 2024 11:21 PM
சென்னை: தமிழகம் முழுதும் முதற்கட்டமாக, 1,000 இடங்களில், முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு அறிக்கை:
'பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்க, 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.
இதை செயல்படுத்துவது தொடர்பாக, கடந்த 29ம் தேதி அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மருந்தகங்கள் அமைக்க, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழக மருத்துவ சேவை கழக அதிகாரிகளுக்கு, உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.
அதன்படி, முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகளை, தமிழக மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து வழங்க உள்ளது. மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள், இம்ப்காப்ஸ், டாம்கால் நிறுவன மருந்துகள், தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள, பி - பார்ம், டி - பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், கூட்டுறவு துறை வாயிலாக, www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், இணையதளத்தில் உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். முதல்வர் மருந்தகங்கள் 2025 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.