'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'
'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'
ADDED : செப் 02, 2025 02:06 AM
சென்னை: ''நான்கு மாணவர்கள் இருந்தால் கூட, அரசு பள்ளிகளை இயக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, 'கல்லுாரி களப் பயணம்' என்ற பெயரில் நடந்தது. அதை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கல்லுாரி பற்றிய பயமும், தயக்கமும் இருக்கும். அவற்றை போக்கும் வகையில்தான், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அவர்களுக்கு, அருகில் உள்ள கல்லுாரியின் சூழல், சோதனைக்கூடம் உள்ளிட்ட வசதிகள், துறைகள் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்க்கும் வகையிலும், கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், அவை சார்ந்த வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும், இது ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி துவங்கியபோது, 47 சதவீதமாக உயர் கல்வி சேர்க்கை இருந்தது. 2022 - 23ம் கல்வியாண்டில் படித்த, 3.97 லட்சம் மாணவர்களில், 2.76 லட்சம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். இது, 70 சதவீதம். அடுத்தாண்டு, 3.36 மாணவர்களில், 2.59 லட்சம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். இது, 77 சதவீதம். தற்போது, உயர் கல்வி சேர்க்கையை 100 சதவீதமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு.
அரசு பள்ளிகளில் இருந்து, 5 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் குறைந்தளவு மாணவர்களே சேர்ந்துள்ளதாக சொல்வதும் உண்மையில்லை. மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வந்தபின், அது புரியும். அரசு பள்ளிகள் சேவை மனப்பான்மையுடன் இயங்குபவை. நான்கு மாணவர்கள் இருந்தாலும், அந்த பள்ளிகள் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

