எடைக்கு போன 10ம் வகுப்பு விடைத்தாட்கள்; விரட்டிப்பிடித்து திரும்ப பெற்ற ஆசிரியர்கள்
எடைக்கு போன 10ம் வகுப்பு விடைத்தாட்கள்; விரட்டிப்பிடித்து திரும்ப பெற்ற ஆசிரியர்கள்
ADDED : டிச 24, 2024 01:46 AM
சிவகங்கை : மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு தேர்வுவிடைத்தாட்களை எடைக்கு போட்டுவிட்டனர். ஆசிரியர்கள் மதுரைக்கு சென்று அதை 'மீட்டு' வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியில்அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு டிச.9ல் தேர்வு துவங்கி நேற்றுடன்முடிவடைந் தது.
10ஆம் வகுப்பிற்கு டிச.10ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ், கணிதம், அறிவியல் விடைத்தாட்கள் கடந்த சனிக்கிழமை பழைய பொருட்களுடன் சேர்த்து தவறுதலாக எடைக்கு போடப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் தேடியபோது எடைக்கு போனது தெரியவந்தது. மதுரையில் அரவைக்கு செல்லும் முன் விடைத்தாட்களை ஆசிரியர்கள் மீட்டு வந்தனர்.
தலைமையாசிரியர் ஆரோக்கியராஜா கூறியது: பழைய பேப்பருடன் தற்போது நடந்த தேர்வு விடைத்தாட்களையும் எடைக்கு போட்டு விட்டனர். இது தெரிந்ததும் மீட்டு வந்துவிட்டோம். 9ம் வகுப்பு கணிதம் 28 பேப்பர், 10ம் வகுப்பு கணிதம் 28 என 56 விடைத்தாட்களை திரும்ப பெற்று விட்டோம் என்றார்.