தமிழகத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்றும் செலவை கேரளா ஏற்க வேண்டும்; பசுமை தீர்ப்பாயம்
தமிழகத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்றும் செலவை கேரளா ஏற்க வேண்டும்; பசுமை தீர்ப்பாயம்
UPDATED : டிச 19, 2024 03:29 AM
ADDED : டிச 18, 2024 09:21 PM

சென்னை:'கேரளத்திலிருந்து கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்றும் செலவை, கேரள அரசே ஏற்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ தொடர்பான வழக்கை, தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது, தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் ஆபத்தான உயிரி மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பை, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் கொட்டப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
தற்போது கூட, நெல்லை மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன' என்றார்.
அதைத் தொடர்ந்து, 'மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி பதப்படுத்தும் வசதி இல்லாவிட்டால், மருத்துவமனைகளை ஏன் அனுமதிக்கிறீர்கள்?' என, தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம், கேரளத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை பதப்படுத்தும் வசதி ஒரு இடத்தில் மட்டும் இருப்பதாகவும், மேலும் ஐந்து இடங்களில் அந்த வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்' என்றார்.
தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் பிறப்பித்த உத்தரவு:
தமிழக எல்லைகளில் சட்ட விரோதமாக உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை, கேரள அரசு தடுக்க தவறியது கண்டனத்திற்குரியது. உயிரி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி பதப்படுத்தும் வசதிகளை, கேரள மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும்.
கேரளாவின் மருத்துவக் கழிவுகளின் மொத்த அளவு, அவற்றை சுத்திகரிக்கும் திறன் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் செலவை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, கேரளா வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.