பெரிய விசைப்படகுகளுக்கு தடை பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை ஆமைகள் இறப்பு
பெரிய விசைப்படகுகளுக்கு தடை பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை ஆமைகள் இறப்பு
ADDED : ஜன 22, 2025 10:27 PM
சென்னை:'கடல் ஆமைகள் இறப்புக்கு, பெரிய விசைப்படகுகள் காரணம் என்பது உறுதியானால், ஆமைகள் குஞ்சுபொரிக்கும் காலங்களில், பெரிய விசைப் படகுகளுக்கு தடை விதிப்போம்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை, கடலோரங்களில், கடந்த 20 நாட்களில் மட்டும், 500 கடல் ஆமைகள், கண்கள், கழுத்து வீங்கிய நிலையில், கரை ஒதுங்கியுள்ளன.
இறந்த கடல் ஆமைகளின், உடலை பரிசோதனை செய்யாமல், புதைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'கடல் ஆமைகள் இறப்புக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'உயிரிழந்த கடல் ஆமைகள் உடலை, கால்நடை மருத்துவ அறிவியல் துறையினர், உடற்கூறாய்வு செய்தனர்.
அதில் கழுத்து, நெஞ்சு பகுதியில் முறிவுகள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 'ட்ராலெர்' எனப்படும் பெரிய விசைப்படகு களில் பயன்படுத்தப்படும் வலையால், கடல் ஆமைகள் இறப்பு நேர்ந்திருக்கலாம் என, வனத்துறை ஆய்வில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்' என்றார்.
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நேப்பியர் பாலம் முதல் உத்தண்டி வரை, 25 இடங்களில் கடல் நீரின் மாதிரியை எடுத்து, வாரியம் ஆய்வு செய்து வருகிறது' என்றார்.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடல் ஆமைகள் இறப்பதை தடுக்க, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை, உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது; அவை செயல்படுத்தப்படவில்லை. கடல் ஆமைகளை பாதுகாக்க, அரசு இயந்திரங்கள் செயல்படாவிட்டால், தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்த பிறகு, ஆமைகள் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடல் ஆமைகள் இறப்புக்கு, பெரிய விசைப்படகுகளின் மீன்பிடி வலைகள் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இது உண்மையாக இருந்தால், கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் காலங்களில், பெரிய விசைப்படகுகளுக்கு தீர்ப்பாயம் தடை விதிக்கும்.
ஆமைகள் இறப்புக்கான காரணம் குறித்து, தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 31ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.