பஸ்சில் 'காகித சீல்' வைத்து அனுப்பிய குரூப் 4 வினாத்தாள்
பஸ்சில் 'காகித சீல்' வைத்து அனுப்பிய குரூப் 4 வினாத்தாள்
ADDED : ஜூலை 12, 2025 03:41 AM

மதுரை : மதுரை மாவட்ட மையங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பின்றி பஸ்சில் அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 12) நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வை 265 மையங்களில் 73 ஆயிரத்து 826 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுப் பணியில் துணைத்தாசில்தார் நிலையில் 72 நகரும் குழுக்கள், துணை கலெக்டர்கள் தலைமையில் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இத்தேர்வுக்காக மதுரை மாவட்டத்திற்கான வினாத்தாள்கள் சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அதனை மாவட்ட கருவூல அலுவலக ஸ்ட்ராங் ரூமில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை அவை சார்நிலை கருவூலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சொகுசு பஸ்சை அமர்த்தி வினாத்தாள் கட்டுகளை ஏற்றினர். அந்த பஸ்சின் பின்புறம், பக்கவாட்டில் உள்ள கதவுகளை ஏ4 தாளால் ஒட்டி சீல் வைத்தனர். வழக்கமாக பூட்டுப் போட்டு அதில் துணியால் சுற்றி மெழுகு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். எனவே வினாத்தாள்களை பாதுகாப்பின்றி அனுப்புவதாக சர்ச்சை உருவானது.
இதுகுறித்து தேர்வு அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மதுரை மாவட்டத்தில் அருகில் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு பஸ்சில் டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள், துப்பாக்கி போலீசாருடன் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது. அதனால் பாதிப்பு எதுவும் வரவில்லை. சீல் வைக்க வேண்டும் என்பதற்காக கதவுகளில் தாள் ஒட்டி சீல் வைத்தனர்'' என்றனர்.