குவாரி விதிமீறலை 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
குவாரி விதிமீறலை 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 09, 2024 01:50 AM
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தில் கல் குவாரி விதிமீறல் குறித்து 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்து, கனிம வள இணை இயக்குனர், கலெக்டர் அறிக்கை தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
முள்ளங்கினாவிளை பால்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:
விளவங்கோடு அருகே நட்டாலம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்திலுள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில் கல் குவாரி நடத்த சிலருக்கு தமிழக அரசு உரிமம் வழங்கியது.
சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் கற்களை வெட்டி எடுக்கின்றனர். அருகிலுள்ள வீடுகள் அதிர்கின்றன. துாசி படலத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. நீர்நிலைகள் மாசடைகின்றன. விதிகளை மீறி அதிக ஆழத்தில் கற்களை வெட்டி எடுக்கின்றனர்.
அருகிலுள்ள நிலத்திலும் குவாரி நடத்தப்படுகிறது; இதற்கு உரிமம் பெறவில்லை. தமிழக கனிம வளத்துறை கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு:
'ட்ரோன்' எனும் ஆளில்லா விமானம் மூலம் மதுரை மண்டல கனிமவளத்துறை இணை இயக்குனர், கன்னியாகுமரி கலெக்டர் ஆய்வு செய்து பிப்., 22ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

