ADDED : மார் 22, 2025 05:34 AM

சென்னை : 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிகழ்கிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யலாம்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும் 25 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை சற்று குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோடில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.