ADDED : நவ 06, 2024 10:58 PM
சென்னை:வளி மண்டல சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு வங்கக் கடலின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மெல்ல வலுவிழந்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.