ADDED : செப் 09, 2025 06:18 AM

சென்னை : 'கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனுார் ஆகிய இட ங்களில் அதிகபட்சமாக தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பெய்து உள்ளது.
மேலடுக்கு சுழற்சி ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
மிதமான மழை வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்.
புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை கன மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.