போராட்டங்களுக்கு அனுமதி வழங்க ஐகோர்ட்டே விதிமுறைகள் வகுக்கும் போலீசுக்கு எச்சரிக்கை
போராட்டங்களுக்கு அனுமதி வழங்க ஐகோர்ட்டே விதிமுறைகள் வகுக்கும் போலீசுக்கு எச்சரிக்கை
ADDED : ஜன 24, 2025 12:39 AM
சென்னை:'போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில், ஜனவரி, 2ல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த காவல் துறை, 'ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்' எனக்கூறி, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து, பா.ம.க., கொள்கை பரப்பு செயலர் பி.கே.சேகர் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'கவர்னருக்கு எதிரான போராட்டத்திற்கு, எந்த கட்டுப்பாடு இல்லாமலும், விண்ணப்பம் பெறாமலும், ஆளுங்கட்சியினருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார்.
போராட்டங்களுக்கு, ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்ட விதியை மீறி செயல்பட்ட மாநகர கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தி.மு.க., போராட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில், 'பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், தி.மு.க.,வினர் கைது செய்யப்படவில்லை. அவர்களின் போராட்டத்தை போலீசார் தடுக்கவும் இல்லை' என, வாதிடப்பட்டது.
அதற்கு காவல் துறை தரப்பில், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், ''விதிமுறைகளை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுத்த வேண்டும். ஆட்சிகள் மாறினாலும், அதிகாரிகள் நீடிப்பர்.
''எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. காவல் துறையினர் பாரபட்சம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது,'' என அறிவுறுத்தினார்.
மேலும், ''போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன், போராட்டத்துக்கு அனுமதி வழங்காதது தொடர்பான மற்றொரு மனுவையும் விசாரித்து, தீர்ப்பு அளிக்க உள்ளதாகக் கூறி, பா.ம.க., மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

