சீகூர் யானைகள் வழித்தட விவகாரம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சீகூர் யானைகள் வழித்தட விவகாரம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 06, 2025 01:49 AM
சென்னை:சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள, 'ரிசார்ட்'களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், சீகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக, தமிழக அரசு அறிவித்தது. மேலும், உதகமண்டலம், கூடலுார் ஆகிய பகுதிகளில், 1.92 லட்சம் ஏக்கர் நிலத்தை, தனியார் வனமாக அறிவித்தும், அரசு உத்தரவு பிறப்பித்தது.
சீகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து, அங்குள்ள தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்தும், சீகூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான குழு, 'சீகூர் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலங்களை, தனியார் வனமாக அரசு அறிவித்த 1991ம் ஆண்டுக்குப் பின், அப்பகுதியில் சொத்துகள், நிலங்கள் வாங்கியிருந்தால், அது செல்லாது' என, கடந்தாண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, இம்மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.