கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை கேட்ட த.வெ.க., மனு மீது அக்., 3ல் ஐகோர்ட் விசாரணை
கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை கேட்ட த.வெ.க., மனு மீது அக்., 3ல் ஐகோர்ட் விசாரணை
UPDATED : செப் 30, 2025 11:00 AM
ADDED : செப் 30, 2025 04:04 AM

மதுரை: கரூரில் விஜய் பிரசாரத்தில், 41 பேர் பலியானது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்யவுள்ள மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டி த.வெ.க.,வினர் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நேற்று வந்தனர். தசரா விடுமுறை காரணமாக மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் செப்., 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் இறந்தனர். நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம், 'திட்டமிட்ட சதி' என த.வெ.க., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அக்கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கரூர் கூட்டத்தில் போலீசார், அரசியல் கட்சியினர் துணையுடன், குண்டர்கள் திட்டமிட்டு இச்சம்பவத்தை நடத்தியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொண்டர்கள் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டன.
தடியடி
கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நோயாளி இல்லாத ஆம்புலன்சை வேண்டுமென்றே கூட்டத்தின் நடுவே செல்ல போலீசார் அனுமதித்தனர். பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். துயர சம்பவம் நடப்பதற்கு முன்பே மருத்துவமனை தயாராக இருந்துள்ளது.
இவை அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சம்பவம் நடந்தபோது
பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விஜய்க்கு அனுமதி வழங்க வேண்டும். உண்மையை கண்டறிய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு குறிப்பிடப் பட்டது.
இவ்வழக்கை அவசர வழக்காகவும், நீதிமன்றம் தாமாக முன்வந்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வழக்கறிஞர் அறிவழகன் நேற்று முன்தினம் நீதிபதி எம்.தண்டபாணியிடம் முறையிட்டார். சம்பவம் நடந்த இடம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்டதால் அங்கு மனுதாக்கல் செய்தால், செப்., 29 மதியம், 2:15 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்ததையடுத்து, த.வெ.க., வழக்கறிஞர்கள் நேற்று மதுரை கிளைக்கு வந்தனர்.
அக்., 5 வரை தசரா விடுமுறை அமலில் உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய மனுக்களை மட்டும் செப்., 30 காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றின் மீது அக்., 3ல் விடுமுறைக்கால அமர்வால் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தசரா விடுமுறை இந்நிலையில், நேற்று த.வெ.க., தரப்பினர் மனுதாக்கல் செய்ய வந்த நிலையில், தசரா விடுமுறையை காரணம் காட்டி மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்று முறையாக மனுதாக்கல் செய்தால், வழக்கு பட்டியலிடப்பட்டு அக்.,3ல் விசாரிக்கப்படும் என, பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது: உடற்கூராய்வை மாலை, 6:00 மணிக்கு மேல் மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கரூரில் அன்று ஒரே இரவில் அவசர, அவசரமாக 39 பேருக்கு உடற்கூராய்வு செய்துள்ளனர்.
சதி வலை
இது எவ்வாறு சாத்தியம். இவற்றை மேற்கொள்ள டாக்டர்கள் எங்கிருந்து வந்தனர். அவர்கள் உடற்கூராய்வு செய்வதற்கான தகுதி படைத்தவர்களா? குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் எதற்காக காலி ஆம்புலன்சுகள் வந்த வண்ணம் இருந்தன உள்ளிட்ட சந்தேகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.
த.வெ.க.,வுக்கு எதிராகவும், அதன் தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு எதிராகவும் ச
தி வலை பின்னப்படுகிறது. பிரசார வாகனத்தை தொண்டர்கள் பின் தொடர்ந்ததால் அவரது வாகனம் மெதுவாக வந்தது. மதியம், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்தனர்.
அதன் அடிப்படையில் தான் அவர் வந்தார். ரோட்டின் இருபுறமும் மக்கள் கூடியிருந்ததால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.