தடை செய்யப்பட்ட குட்காவிற்கு எதிரான நடவடிக்கை போதுமானதல்ல; உயர்நீதிமன்றம் உத்தரவு
தடை செய்யப்பட்ட குட்காவிற்கு எதிரான நடவடிக்கை போதுமானதல்ல; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 12, 2025 05:33 AM

மதுரை : தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில், 'இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதல்ல என நீதிமன்றம் கருதுகிறது. உணவு பாதுகாப்புத்துறையுடன் ஒருங்கிணைந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கொடிமங்கலம் செந்தில்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: குட்கா, பான்மசாலாவிற்கு தடை விதித்து 2013 மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது. அவ்வாறு செய்யாமல் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும்.
குட்காவிற்கு தடை உள்ள நிலையில் சிறு கடைகளில் தடையின்றி விற்பனையாகிறது. குட்கா உற்பத்தி நிறுவனங்கள், குடோன்கள், முகவர்கள், கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர் சோதனை நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: குட்கா, பான்மசாலாவிற்கு பிற மாநிலங்களில் தடை விதிக்கப்படவில்லை. அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் குட்கா, பான்மசாலாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர் என தெரிவித்தது.
பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இவ்விவகாரத்தில்அரசின் நடவடிக்கை போதுமானதல்ல என இந்நீதிமன்றம் கருதுகிறது. போலீசார் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையுடன் ஒருங்கிணைந்து போலீசார் விரை ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.