உயர்நிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 7 சதவீதமாக குறைவு
உயர்நிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 7 சதவீதமாக குறைவு
ADDED : மார் 21, 2025 12:54 AM
சென்னை:தமிழகத்தில், உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், 10.9ல் இருந்து ஏழு சதவீதமாக குறைந்துள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
கடந்த, 2022 - -23ம் கல்வியாண்டில், தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல், 10.9 சதவீதம் என, மத்திய அரசு கணக்கிட்ட நிலையில், 2023 - 24ம் கல்வியாண்டில், அது, 7 சதவீதமாக குறைந்துஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், மாணவர்கள், 10.8 சதவீதம், மாணவியர் 4.4 சதவீதம் உள்ளனர். ஆண் குழந்தைகளில், பள்ளிப்படிப்பை இடை நிறுத்துபவர்களின் விகிதம், 10.8 சதவீதமாகவும், பெண் குழந்தைகளில், 4.4 சதவீதமாகவும் இருந்தது.
இந்த ஆண்டு, இதை குறைக்கும் வகையில், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்களின் அனைத்து விபரங்களும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதில், இடைநிற்றல் உறுதியானால், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர, முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், வரும் கல்வியாண்டில் இடைநிற்றல் சதவீதம் மேலும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.