ADDED : டிச 18, 2024 07:49 PM
திருப்பூர்:'கோவில் பொக்கிஷங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுாரில் உள்ள பக்த ஜனேஸ்வரர் கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், திருத்தேர் பாகங்களை ஒரு அறையில் வைத்துள்ளனர்.
இந்த பொக்கிஷங்களை சிலர் பு.மாம்பாக்கத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் விற்றதை பார்த்த கிராம மக்கள், எடைக்கு போட்டவரை விரட்டி பிடித்தனர். அப்போது, 'இது ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் நடந்த திருட்டு' என, தெரியவந்தது.
அங்கு, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி மதனா வந்த வாகனத்தை மக்கள் சிறைபிடித்தனர். 'அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகாரளிப்பேன்' என, மதீனா மக்களை மிரட்டியுள்ளார். இதனால், அதிகாரிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
உடனே, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி, தங்களுக்கு தெரியாமல், பட்டப்பகவில் அறையில் வைக்கப்பட்டிருந்த கோவில் பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதிகாரி மதீனா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. தமிழக அரசும், போலீசாரும் கோவிலின் பொக்கிஷமான செப்பேடுகள், பழம்பொருட்களை திருடி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூவர் கைது
இச்சம்பவம் தொடர்பாக, பக்த ஜனேஸ்வர் கோவிலின் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா நேற்று முன்தினம் திருநாவலுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தொடர்ந்து, அறநிலையத் துறை உதவியாளர் திருநாவலுார் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஸ்வரன், 30; கோவில் வாட்ச்மேன் பரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், 56, டிராக்டர் டிரைவர் திருநாவலுார் பாண்டியன், 43; ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.