இளையராஜா பாடல்களால் கிடைத்த வருவாய் எவ்வளவு? சோனியிடம் ஐகோர்ட் கேள்வி
இளையராஜா பாடல்களால் கிடைத்த வருவாய் எவ்வளவு? சோனியிடம் ஐகோர்ட் கேள்வி
ADDED : செப் 26, 2025 08:25 PM
சென்னை:இளையராஜா இசையமைத்த பாடல்கள் மற்றும் இசை படைப்புகளை பயன்படுத்தி ஈட்டிய, மொத்த வருவாய் தொடர்பான கணக்கு விபரங்களை சமர்ப்பிக்கும்படி, 'சோனி மியூசிக்' நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா, எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி மற்றும் ஓரியன்டல் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனு விபரம்:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், 7,500 பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளேன். இசை பணியை பாராட்டி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து உள்ளன.
பதிப்புரிமை சட்டத்தின் கீழ், நான் இசையமைத்த பாடல்கள், இசை படைப்புகளுக்கு, நான் மட்டுமே உரிமையாளர். இசை நிறுவனங்கள், என் இசை படைப்புகள் அல்லது அதன் எந்த பகுதியையும் மறுவடிவமைப்பு செய்வதையும், வினியோகிப்பதையும் வணிக ரீதியாகவும் ஆதாயம் தேடுவதையும் தடுக்க வேண்டும்.
நான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி சம்பாதித்த தொகையில், 50 சதவீதத்தை, 'டிபாசிட்' செய்ய, சோனி மியூசிக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதி என்.செந்தில்குமார் விசாரித்தார்.
இளையராஜா இசையமைத்த பாடல்கள் மற்றும் இசை படைப்புகளை, வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய, மொத்த வருவாய் தொடர்பான கணக்கு விபரங்களை, சோனி நிறுவனம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்; அக்., 16ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.